தமிழக ஆளுநராகிறார் மாஜி மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா?
டெல்லி: தமிழக ஆளுநராக இருக்கும் ரோசய்யாவின் பதவி காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து பாஜக முன்னாள் அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா விரைவில் தமிழக ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
2014 ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்வேறு மாநில ஆளுநர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் பதவியில் நீடித்து வந்தார். ஆந்திரா காங்கிரஸ் அமைச்சரவைகளில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு இலாக்காக்களை வகித்தவர் ரோசய்யா.

2011 ல் ரோசய்யாவை தமிழக கவர்னராக நியமித்தது, அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் விட்டு வைக்கப்பட்டதற்கு காரணம், ஜெயலலிதாவிடம் அவர் காட்டிய மரியாதைதான்.
இந்நிலையில் ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனால் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான வேலைகள் தொடங்கியுள்ளன. அடுத்த ஆளுநராக தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளது. இதனிடையே
மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 75 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருதுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரை தமிழக ஆளுநராக நியமிக்க பரிசீலனை நடந்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications