விடைபெற்றார் அமெரிக்க தூதர் நான்ஸி பாவெல்! தற்காலிக தூதராக கேத்லீன் நியமனம்!
டெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்ஸி பாவெல் தனது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அமெரிக்காவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அவருக்குப் பதிலாக அந்நாட்டு வெளியுறவுத்துறையின் மூத்த பிரதிநிதியான கேத்லீன் ஸ்டீவன்ஸ் இந்தியாவுக்கான தற்காலிகத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்ட நான்ஸி பாவெல், அமெரிக்காவில் இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையினால் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொள்ளவிரும்புவதாக கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்தார். இதையடுத்து அவர் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நேற்று அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றார்.

வரும் ஜூன் மாதம் இந்தியா வரவுள்ள கேத்லீன் ஸ்டீவன்ஸ் தாற்காலிகத் தூதர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். நிரந்தர தூதரை நியமிக்கும்வரையில் இந்தப் பதவியில் அவர் தொடர்வார் என்று அமெரிக்க செனட் அறிவித்துள்ளது.
கடந்த 2008 முதல் 2011 வரை தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதராக கேத்லீன் ஸ்டீவன்ஸ் பதவி வகித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையில் பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார். இதனிடையே இந்தியாவுக்கான நிரந்தர தூதரை அதிபர் ஒபாமாவின் அரசு இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications