மோடி ஒரு சிறந்த தலைவர்- தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர் என்றும்,நீதிபதிகள் நியமனத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறையால் வருத்தம் ஏதும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம், "நீதிபதிகளைக் கொண்ட குழுவால் நீதிபதிகள் நியமிக்கப்படும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற புதிய நடைமுறையைக் கொண்டுவருவது குறித்து வருத்தம் ஏதும் இல்லை.
இந்தப் புதிய முறை அமலுக்கு வரும் வரையில் "கொலிஜியம்" முறையே தொடரும். இதனால் நீதிபதிகளின் அதிகாரம் பறிபோய்விட்டதாக நான் கருதவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியை ஒரு சிறந்த தலைவராகக் கருதுகிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர் மட்டுமின்றி தொலைநோக்கு பார்வையும் கொண்டவர். நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார்.
நீதித்துறையின் கோரிக்கைகளை அவரது தலைமையின் கீழ் உள்ள அரசு மிகுந்த கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார் தத்து.