மீண்டும் பாட்னா செல்கிறார் மோடி.. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்கிறார்
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் படுகாயமடைந்தோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை மீண்டும் அங்கு செல்ல இருக்கிறார்.
கடந்த ஞாயிறன்று பாட்னாவில் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 6 பேர் பலியாகினர். 100பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி, நரேந்திர மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் பாரதிய ஜனதா கட்சியினர்.
இதனால் பலியானோர் குடும்பத்தினருக்கும் படுகாயமடைந்தோருக்கும் ஆறுதல் தெரிவிக்க வர வேண்டும் என்று மோடியிடம் கேட்டுக் கொண்டோம். அவரும் வரும் சனிக்கிழமையன்று பாட்னாவுக்கு மீண்டும் வருவதாக உறுதியளித்திருக்கிறார்.
வெவ்வேறு மாவட்டங்களின் 6 கிராமங்களுக்கு சென்று பலியானோர் குடும்பத்தினரை மோடி சந்திக்க இருக்கிறார். இந்த 6 கிராமங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் மோடி செல்கிறார்.
அத்துடன் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தோரையும் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications