ரூபாய் நோட்டு விவகாரம்.. குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு !
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை டெல்லியில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 8-ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனிடையே ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் மத்திய அரசின் செயல்பாடுகள் தோல்வியடைந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் குடியரசுத் தலைவரையும் சந்தித்து அவர்கள் முறையிட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை திடீரென குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றன. அப்போது, பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்கவும், நாடு முழுவதும் பணம் தாராளமாக கிடைக்கவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.