மோடி மனைவி, தாயாருக்கு கருப்புப் பூனைப் பாதுகாப்பு... மோடிக்கு 1000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு
டெல்லி: பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் மனைவி மற்றும் தாயாருக்கு சிறப்புப் பாதுகாப்புப் படை அதாவது கருப்புப் பூனைப் படைப் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றவுடன் இந்தப் பாதுகாப்பு இருவருக்கும் வழங்கப்படும்.
இந்தியப் பிரதமரின் தாயார் மற்றும் மனைவி என்ற அடிப்படையில் இவர்களுக்கு இப்பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.

தாயார் ஹீரா பென் - மனைவி ஜசோதா பென்
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், மோடியின் தாயார் ஹீரா பென், மனைவி ஜசோதா பென் ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்படும். அதேசமயம், மோடியின் 3 சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும். இதை மாநில போலீஸார் வழங்குவர் என்றார்.

தனித்து வசிக்கும் மனைவி
மோடியின் தாயார், மனைவி மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருமே குஜராத்தில்தான் வசித்து வருகின்றனர். இதில் மனைவி மட்டும் தனியாக இருக்கிறார். அவருக்கும், மோடி குடும்பத்துக்கும் இடையே தொடர்பு இல்லை. மோடியே கூட தனது மனைவி குறித்து வேட்பு மனுத் தாக்கல் செய்தபோதுதான் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமாண்டோக்கள் வருகை
மோடி குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக எஸ்பிஜி கமாண்டோக்கள் ஏற்கனவே குஜராத் வந்து சேர்ந்து விட்டனர். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் தற்போது ஆலோசித்து வருகின்றனர்.

சகோதரர்கள்
மோடியின் அண்ணன் பெயர் சோமா. இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெறறவர். தற்போது அகமதாபாத்தில் முதியோர் இல்லம நடத்தி வருகிறார். மோடியின் இன்னொரு சகோதரர் பெயர் பிரகலாத். இவர் அகமதாபாத்தில் கடை வைத்துள்ளார். அடுத்த சகோதரர் பங்கஜ், குஜராத் அரசின் செய்தி ஒளிபரப்புத்துறையில் கிளர்க் ஆக இருக்கிறார்.

மூத்த மகனுடன் தாயார்
மோடியின் தாயார் தனது மூத்த மகன் சோமா, அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். சோமாவின் மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர்கள் பலன்பூர் மாவட்டம் ராஜ்சானாவில் வசித்து வருகின்றனர்.

சட்டப்படி
எஸ்பிஜி சட்டப்படி இந்தியாவின் பிரதமர், அவரது உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு கருப்புப் பூனைப் படைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் விவிஐபி பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.

மோடிக்கு 1000 பாதுகாப்புப் படையினர்
இதற்கிடையே, மோடிக்கு முக்கிய தாக்குதல் அபாயம் இருப்பதால் டெல்லியில் அவர் வசிக்கப் போகும் பிரதமர் இல்லத்தில் 1000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைக்கு இவர்களுக்கு
தற்போது மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, வாஜ்பாய் ஆகியோருக்கு கருப்புப் பூனைப் படைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications