மோடி மனைவிக்கு பாரத ரத்னா.. ஏன் நோபல் பரிசே கொடுக்கலாம்: அசாம் முதல்வர் தருண் கோகய்
குவஹாத்தி: மோடிக்காக தன்னை சன்னியாசிக்கிக் கொண்ட அவரது மனைவி ஜஷோடாபென்தான் உலகத்திலேயே தியாகத்தின் திருவுருவம்.. அவருக்கு பாரத் ரத்னா..இல்லையில்லை.. நோபல் பரிசும் கூட கொடுக்கலாம் என்று அசாம் முதல்வர் தருண் கோகய் கூறியுள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமது வேட்பு மனுவில் திருமணமானதை முதன் முறையாக ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தம் பங்குக்கு அசாம் மாநில முதல்வர் தருண் கோகயும் இந்த கோதாவில் இறங்கியுள்ளார். அவர் இது பற்றி கூறியுள்ளதாவது:
மோடியின் மனைவி ஜஷோடபென் தியாகத்தின் திருவுவுருவம்.. இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே இப்படி ஒருவர் இருக்க முடியாது. இத்தனை காலம் அத்தனை வலிகளையும் சுமந்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்... அவரது வலியை நாட்டில் யாருமே உணரவில்லையே.,.
அவரது அமைதிக்காக நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும். இன்னும் 10 நாட்களில் ஜஷோடபென்னுக்கு பாரத் ரத்னா விருது தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போகிறேன். அவருக்கு 100 முறை சல்யூட் செலுத்துகிறேன். அவர் மிகவும் மரியாதைக்குரிய பெண்.
ஜஷோடபென் தான் உண்மையான சன்னியாசி. மோடி தன்னை சன்னியாசி என்று சொல்லிக் கொண்டாலும் அதிகாரப் பசி கொண்டவர். அதாவது மோடி அமெரிக்க சன்னியாசி.
அவருக்கு தெரிந்தது எல்லாம் குஜராத் முதல்வர் பதவி மட்டும்தானே.. இப்படியான ஒரு மனிதர் தான் நாட்டின் பிரதமராகப் போகிறாராம்...
இவ்வாறு தருண் கோகய் விமர்சித்துள்ளார்.