தொழுகை ஒலி கேட்டு உரையை பாதியில் நிறுத்திய மோடி! சமூக வலைத்தளங்களில் பாராட்டு
Recommended Video
டெல்லி: மசூதியில் தொழுகை நடைபெற்றதால், பாஜக தொண்டர்களுடனான உரையை நிறுத்தி அமைதிகாத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி முந்தைய தேர்தல்களைவிட அதிக முன்னேற்றம் கண்டுள்ளது. திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது பாஜக கூட்டணி.
இதனிடையே மாலையில், வெற்றிச் செய்தியை தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டாட டெல்லியில், பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. அவர் உரையை ஆரம்பித்த சில வினாடிகளில், அருகேயுள்ள மசூதியில் மாலை நேர தொழுகை நடந்தது. அதன் ஒலி ஒலிபெருக்கி வாயிலாக பாஜக அலுவலகத்தில் உள்ளோருக்கும் கேட்டது.
இதையடுத்து, தொழுகை நடைபெறுவதால் தனது உரையை சற்று நிறுத்துவதாக கூறிய மோடி, தொழுகை முடியும் அவரி மேடையிலேயே பேசாமல் நின்றிருந்தார். தொழுகை நிறைவடைந்த பிறகு, தனது உரையை தொடர்ந்தார்.
இந்துத்துவா கொள்கை கொண்ட பாஜக கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், மதசார்பற்ற நாடான இந்தியாவின் பிரதமராக மோடி நடந்துகொண்டார் என்று நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.