விட்டால் வாஜ்பாயையே கட்சியை விட்டு துரத்தியிருப்பார் மோடி - ராகுல் காந்தி
கராலி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மட்டும் தொடர்ந்து அரசியலில் நீடித்திருந்தால், ஜஸ்வந்த் சிங், அத்வானிக்கு ஏற்பட்ட கதிதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும். வாஜ்பாயையும் அரசியலை விட்டே துரத்தியிருப்பார் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கராலி என்ற இடத்தில் நேற்று நடந்த பிரசாரத்தின்போது மோடியை இவ்வாறு கடுமையாகத் தாக்கிப் பேசினார் ராகுல் காந்தி. இந்தப் பிரசாரத்தின்போது மூத்த தலைவர்களை மோடி மதிக்காமல் ஒதுக்குவதை சுட்டிக் காட்டிப் பேசினார் ராகுல் காந்தி.
இது தொடர்பாக மேலும் ராகுல் பேசியதாவது :-
தொழிலதிபர்களின் காவலர்...
"போகும் இடமெல்லாம் இந்த நாட்டைக் காக்கும் வாட்ச்மேன் வேலையை எனக்குத் தாருங்கள் என்று மோடி கேட்கிறார். ஆனால் உண்மையில் இவர் தொழிலதிபர்களுக்குத்தான் காவலாக உள்ளார்.
அதானிக்கு வரவேற்பு...
தலைவர்களையெல்லாம் கட்சியை விட்டு நீக்கி வருகிறார். அவருக்கு அதானி மட்டும் இப்போது போதும்.
இவர் மட்டுமே காரணம் அல்ல...
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தானே காரணம் என்று கூறுகிறார் மோடி. உண்மை அதுவல்ல. தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்துத் துறையினரின் கடுமையான உழைப்பால்தான் குஜராத் வளர்ந்தது.
சாவி கொடுத்தும் பயன் இல்லையே...
நாட்டின் சாவியை தன்னிடம் ஒப்படைக்குமாறு இவர் கேட்கிறார். குஜராத் மக்கள் கொடுத்த சாவியையே அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அதானியைத்தான் இவர் வரவேற்கிறார்.
அத்வானி, ஜஸ்வந்த் சிங் நிலைமை...
பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, ஜஸ்வந்த் சிங்குக்கு ஏற்பட்ட நிலைமை அனைவரும் அறிந்ததே. ஒருவேளை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்திருந்தால் அவருக்கும் இதே கதிதான் ஏற்பட்டிருக்கும்" என்றார் ராகுல் காந்தி.