ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.. ராகுல், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் முதல்வரானார் உமர் அப்துல்லா. காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தான் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 90 இடங்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது.
அங்கு ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற போது 48 எம்எல்ஏக்கள் ஆதரவு தேசிய மாநாட்டு கட்சிக்கு கிடைத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று பரூக் அப்துல்லா கூறினார். தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேர் ஆதரவு அளித்தனர்.
இதனால் காங்கிரஸ் தயவு இல்லாமலே அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைத்தது. இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த உமர் அப்துல்லா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்று உமர் அப்துல்லாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதன்படி உமர் அப்துல்லா இன்று ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்று கொண்டார்.
இன்று காலை 11.30 மணியளவில் உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆட்சி அமைக்கும் தேசிய மாநாட்டு கட்சிக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் எனவும் அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சி இடம் கோராது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வராக பதவியேற்கும் விழாவில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மெற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், திமுக சார்பாக கனிமொழி எம்பி, சிவசேனா (உத்தவ்) உத்த்வ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications