கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வு.. திடீர் அறிவிப்பால் மாணவர்கள் அலைக்கழிப்பு!
அகமதாபாத்: குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நுழைவுத்தேர்வு எழுத, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் திடீரென நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நுழைவுத் தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்த நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நுழைவுத்தேவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் ஜூன் 7 மற்றும் 8, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு (NFAT 2025) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்விப் படிப்புகளில் சேருவதற்கான NFAT தேர்வு 2025 எழுத திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான (NFAT 2025) தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தேர்வு மையத்திற்கு டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாத விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் டிக்கெட்டுகளை திருப்பிச் செலுத்துவதற்காக சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதில் ஏற்பட்ட குளறுபடிகள் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. பல விண்ணப்பதாரர்கள் சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக தங்கள் விரக்தியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தினர். இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அறிவிக்கப்பட்டிருந்தது. நுழைவுத் தேர்வுக்காக ஏராளமான மாணவர்கள் டிக்கெட் புக் செய்து பயணித்திருந்த நிலையில் இந்த திடீர் ஒத்திவைப்பு தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நுழைவுத்தேர்வு எழுத, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் திடீரென நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications