ஒடிஷா: பாஜக தலைவர்களின் படையெடுப்பை மீறி 5-வது முறையாக முதல்வராக அரியணை ஏறுவாரா நவீன் பட்நாயக்?
புவனேஸ்வர்: ஒடிஷாவில் ஆட்சியைக் கைப்பற்ற துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் 5-வது முறையாக மீண்டும் முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்க வாய்ப்பிருக்கிறது என்கின்றன அம்மாநில தகவல்கள்.
ஒடிஷாவின் முதல்வராக 2000-ம் ஆண்டு மே மாதம் நவீன் பட்நாயக் பதவியேற்றார். அத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார் நவீன். 2004-ம் ஆண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இடம்பெற்றது.

லோக்சபா தேர்தலில் பாஜக தோற்றபோதும் ஒடிஷாவில் ஆட்சியைக் கைப்பற்றியது பிஜூ ஜனதா தளம். 2009-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இடதுசாரிகளின் 3-வது அணியில் இணைந்தார் நவீன் பட்நாயக் அத்தேர்தலிலும் ஏறுமுகம்தான் நவீனுக்கு.
2014 லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 20ஐ பிஜூ ஜனதா தளம் அள்ளியது. சட்டசபையில் 147 தொகுதிகளில் 117-ல் பிஜூ ஜனதா தளம் வென்று 4-வது முறையாக ஒடிஷாவின் முதல்வரானார் நவீன் பட்நாயக். இம்முறை சட்டசபைக்கு 2 தொகுதிகளில் நவீன் போட்டியிடுகிறார்.
இந்தியாவிலேயே தாய்மொழியில் சரியாக பேசவராத ஒரே முதல்வர் நவீன் பட்நாயக். ஆனால் இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாக பேசக் கூடியவரும் நவீன் பட்நாயக். ஒடிஷாவில் லோக்சபா, சட்டசபை தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 29-ல் நிறைவடைந்தது. ஒடிஷாவைப் பொறுத்தவரையில் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இருப்பினும் பாஜகவுக்கும் பிஜூ ஜனதா தளத்துக்கும்தான் நேரடி கடும் போட்டி.
72 வயதாகும் நவீன் பட்நாயக் சுமார் 100-க்கும் அதிகமான பிரசார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரும் பல கூட்டங்களில் தீவிரமாக பங்கேற்றனர்.
தற்போதைய லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் மாநில கட்சிகளின் கை ஓங்கி இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் என்னதான் நவீன் பட்நாயக்கை மாநிலத்தில் எதிர்த்தாலும் மத்தியில் ஏதேனும் ஒரு அரசு அமைந்தால் நிச்சயம் பிஜூ ஜனதா தளம் ஆதரவு அவசியம் என்பது கள யதார்த்தம்.












Click it and Unblock the Notifications