அதிநவீன போர்க் கப்பல் 'ஐஎன்எஸ் விசாகப்பட்டணம்' அறிமுகம்... சூப்பர்சானிக் ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல்
மும்பை: அதி நவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் இன்று மும்பையில் அறிமுகம் செய்து தொடங்கி வைக்கப்பட்டது. கடற்படைத் தலைமைத் தளபதி ஆர்.கே. தோவன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

3000 டன் எடை கொண்ட பிரமாண்டமான போர்க்கப்பல் விசாகப்பட்டணம் ஆகும். 163 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் செல்லும். அதிநவீன ஆயுதங்கள், சென்சார்கள், நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட தாக்குதல் கப்பல் விசாகப்பட்டணம்.

மேலும், தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய சூப்பர்சானிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கப்பல் இது. இதுதவிர பல்வேறு தாக்குதல் ஆயுதங்களையும் இதில் பொருத்தியுள்ளனர். இந்தியாவின் கடற்படை பலத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக இது அமைந்துள்ளது.

மும்பையில் உள்ள மஸகோவன் கப்பல் கட்டும் தளத்திலிருந்து இந்த கப்பல் கடலில் விடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

பி15 பி ரக போர்க்கப்பல் வரிசையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முதல் கப்பல் இதுவாகும்.
ஏற்கனவே பி15ஏ கொல்கத்தா என்ற போர்க்கப்பலை இந்தியா உருவாக்கியுள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இந்த விசாகப்பட்டணம்.
4 காஸ் டர்பைன்கள் மூலம் இயங்கக் கூடிய விசாகப்பட்டணம் கப்பலானது, அதி நவீன ஆயுதங்களுடன் கூடியதாகும். அதி நவீன தகவல் தொடர்பு வசதிகள், தாக்கதுல் வசதிகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

மேலும் இந்தக் கப்பலில் விமான எதிர்ப்பு பீரங்கிகளும், ஏவுகணைகளும் பொருத்தப்படுவதால் இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்புக்கும் இது உறுதி செய்கிறது.
மேலும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கக் கூடிய வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. இக்கப்பலில் 30 மில்லி மீட்டர் அதி வேக துப்பாக்கிகள் 4 பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு எம்.ஆர். துப்பாக்கியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இதுதவிர இந்தக் கப்பலில் இரட்டைக் குழல் டர்பிடோ லாஞ்சர்களும், ராக்கெட் லாஞ்சர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இவை நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை படைத்தவையாகும்.
தற்போது இந்தியாவில், நான்கு போர்க் கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் பல்வேறு கட்டங்களில் தயாரிப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications