சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுவிக்க எதிர்ப்பு - காங். பாதையில் பாஜக அரசும்!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போன்றே தானும் எதிர்ப்பு தெரிவிக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு 2001ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனு மீது தாமதாக பதில் அளிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து ராஜீவ் வழக்கில் கைதான சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி அறிவித்தார். மேலும் இது குறித்து மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களை விடுவிப்பதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிப்ரவரி 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்களை விடுவிக்கவே கூடாது என்று அது நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து ஏப்ரல் 25ம் தேதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சிற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் பாஜக தலைமையிலான மத்திய அரசு சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது.
பாஜக என்னதான் காங்கிரஸுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினாலும், தமிழக அரசுடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்ள முயன்றாலும் ராஜீவ் காந்தி வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையையே எடுக்க உள்ளது.












Click it and Unblock the Notifications