கோபம் காட்டிய இயற்கை..உணவுக்கு கையேந்தும் மக்கள்! களத்தில் என்டிஆர்எப்..என்ன நடக்கிறது ஆந்திராவில்?
அமராவதி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை வெள்ள பாதிப்பு புரட்டி போட்டு இருக்கும் நிலையில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. லட்சக்கணக்கானோர் வீடு இன்றி சொத்துக்களை இழந்து தவித்து வரும் நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது..
இந்த ஆண்டின் மிகப்பெரிய கோர நிகழ்வாக கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் இருந்தது. அதன் பாதிப்பிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய இடியாக வந்திருக்கிறது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை புரட்டி போட்ட வெள்ள பாதிப்பு..

கடந்த சில நாட்களாகவே ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் மேக வெடிப்பு பாதிப்பு ஏற்பட்டது போல கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
குறிப்பாக ஆந்திராவில் கிருஷ்ணா, குண்டூர், என்டிஆர் ஆகிய மாவட்டங்களில் காற்றாற்று வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்து இருக்கிறது. மூன்று நாட்களில் இதுவரை இல்லாத அளவு கன மழை கொட்டி தீர்த்ததால் வீடுகள், கார்கள், கால்நடைகள் உள்ளிட்ட பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உணவு, குடிநீரின்றி அல்லாடி வருகின்றனர்.
#WATCH | Andhra Pradesh: The NDRF team, along with Central forces and district officials provided food, drinking water, and other essential items to the flood-affected areas in Vijayawada through helicopters.
— ANI (@ANI) September 3, 2024
(Source: I&PR) pic.twitter.com/DDsD6Q0hjB
பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுபோல விமான சேவைகளும் போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மின்கம்பங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மின்சார வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஆந்திராவில் மட்டும் கிட்டத்தட்ட நான்கு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 31 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான கால்நடைகளும், ஆயிரக்கணக்கான கோழிகளும் உயிரிழந்துள்ளது. இதேபோல மீன்பிடி படகுகள், துணை மின் நிலையங்கள், ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள், ஒன்றரை லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்டுப் பணிகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்து எண்டிஆர்எஃப் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கடற்படையும் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது. இதை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மூலமும் ஜேசிபி மூலமும் சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி சந்திரபாபு நாயுடுவிடம் தொலைபேசி மூலம் பேசி ஆந்திராவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என உறுதி அளித்தார். தெலுங்கானாவில் இதேபோல பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பிறகு வெள்ள பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல இடங்களில் மக்கள் மேடான பகுதிகளிலும், வீட்டில் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மின்சாரம், தொலைதொடர்பு வசதி இல்லாததால் அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடற்படை வழங்கிய ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படை வீரர்களும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு வான் வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். பல இடங்களில் சிக்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வான் வழியாக வழங்கப்படுகிறது.
பல இடங்களில் வானில் பறக்கும் ஹெலிகாப்டர்களை பார்த்து உணவுக்காக மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளம் வடிய இன்னும் இரண்டு ஒரு நாட்கள் ஆகும் என கூறப்படும் நிலையில் மீட்பு பணிகளை விரைவு படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications