13 மாநிலங்கள்... 6000 அதிரடி சோதனைகள்... 75,000 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் பறிமுதல்!
டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பதுக்கல்காரர்கள், பருப்பு வகைகளைப் பதுக்கி, தட்டுப்பாட்டை அதிகரித்து மேலும் விலையை உயர்த்தி வருகின்றனர். தற்போது சந்தையில் சில்லறை விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ. 200ஐத் தாண்டி விற்பனையாகிறது.

இறக்குமதி...
எனவே, பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்தல், பருப்பு வகைகளைப் பதுக்குவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

பதுக்கல்காரர்கள்...
இதுதவிர பருப்பு வகைகளைப் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருப்புகளை மீட்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

அதிரடி சோதனை...
இந்நிலையில், இந்தியாவின் 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட 6077 அதிரடி சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 75,000 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மகாரஷ்டிராவில் மகா பதுக்கல்...
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 46,000 டன்னும், கர்நாடகாவில் 9000 டன்னும், பீகாரில் 5000 டன்னும் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடரும்...
பருப்பு விலை குறையும் வரையில் இந்த அதிரடி சோதனைகள் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications