பங்குச் சந்தையில் ரூ.10,000 கோடி போச்சு... மேகி சர்ச்சையில் நெஸ்லே-வுக்கு பலத்த அடி
மும்பை : கூடுதல் ரசாயனக் கலப்பு விவகாரத்தில் மேகி சிக்கியுள்ள நிலையில், அதனை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்திற்கு பங்குச்சந்தையில் கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேகி நூடுல்சில் காரீயம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதையடுத்து, மேகி விற்பனையை டெல்லி, குஜராத், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தடை செய்துள்ளன.
இதன் பீதி நாடு முழுவதும் பரவியுள்ளதால் மேகி விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது.
இதனால் பங்குச் சந்தையில் மேகியை தயாரிக்கும் நெஸ்லே நிறுவன பங்குகள் விலை படு வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் 5 வர்த்தக நாட்களில் மட்டும் நெஸ்லே நி'றுவன பங்குகள் மதிப்பு சுமார் ரூ.10,000 கோடி அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் நெஸ்லே நிறுவன பங்குகள் விலை 7 மாதங்களுக்குப் பிறகு 15 சதவீதம் சரிந்துள்ளது.
பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே தயாரிக்கும் பொருட்களிலேயே மேகி தயாரிப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் தான் அதிகம்.
இந்நிலையில், தடை விதிக்கும் மாநிலங்கள் அதிகரித்து வருவதால், சர்சைக்குள் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள மேகி பாக்கெட்டுகளை திரும்பப் பெற நெஸ்லே நிறுவனம் முடிவு செய்துள்ளது.