ஸ்மார்ட் 'கிராம'ங்களை உருவாக்கவே முன்னுரிமை அளிக்க வேண்டும்: உ.பி. அமைச்சர் ஆசாம் கான்
லக்னோ: ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதைவிட ஸ்மார்ட் கிராமங்கள் அமைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் அதிக நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றுக்கு செல்லும் இந்திய குழுவின் தலைவராக உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆசாம் கான் ஸ்மார்ட் நகரங்களை விட ஸ்மார்ட் கிராமங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆசாம் கான் கூறியதாவது:
நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக உலக வங்கியின் உதவியை மத்திய அரசு கோரியும் உள்ளது.
அதே நேரத்தில் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயருதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நகரங்கள் கூடுதல் சுமையை தாங்கும் நிலை ஏற்படுகிறது. இது சட்டம் ஒழுங்கு உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.
தற்போது ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கினால் கூடுதலாகத்தான் கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயருவார்கள். ஆகையால் ஸ்மார்ட் சிட்டிக்கான நிதியை ஸ்மார்ட் கிராமங்களுக்கு பயன்படுத்த வேண்டும்; கிராமங்களில் பள்ளிக் கூடங்கள், மின்சார வசதியை மேம்படுத்த வேண்டும்.
பிரதமரின் தொகுதியான வாரணாசிக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. குறிப்பாக நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மாநிலங்கள் தங்களது திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற இயலவில்லை.
இவ்வாறு ஆசாம் கான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications