நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வாரியம் வெளியிடுவதில் எந்தவித தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்தது.
டெல்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக நீக்கியது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு ஒரே மாதிரியான சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதால் தேசிய தகுதிகாண தேர்வு எனப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது.
இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சென்றுள்ளது.
இதனிடையே கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் 18.34 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதன் முடிவுகள் ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என்ற நிலையில் பிறமொழிகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களில் பாரபட்சம் இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தார்.
இதை எதிர்த்து சிபிஎஸ்இ வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கினர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை சிபிஎஸ்இ வாரியமே முடிவு செய்து கொள்ளலாம் என்றனர்.