நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அவசரச் சட்டம் கொண்டு வர டெல்லியில் எடப்பாடி ஆலோசனை
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து மத்திய அரசுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றன.
மருத்துவ சேர்க்கைக்காக நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வானது இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோன்ற இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வால் தமிழக மாணவர்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவானது எட்டாக்கனியாகிவிடும் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. இந்த நிலையில் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடப்பதற்கு முன்பிலிருந்தே இதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகத்தின் ஆளும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
பல கட்ட பேச்சுவார்த்தை
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவுடன் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் பதவியேற்பு விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி...
இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
அவசரச் சட்டம்
மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட ரீதியிலாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரினர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை பிறப்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவசர சட்டத்துக்கு பிறகு கலந்தாய்வு
நீட் தேர்வில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்காவது விலக்கு பெற தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அவசரச் சட்டம் பிறப்பித்த பின்னரே மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிகிறது.