நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் பிராவை கழற்ற சொல்லி அராஜகம்.. கேரளாவில் 4 ஆசிரியைகள் சஸ்பெண்ட்
மாணவியிடம் பிராவை கழற்ற உத்தரவிட்டு அத்துமீறிய, ஆசிரியைகள், ஷீஜா, சஃபீனா, பிந்து மமற்றும் சஹைனா ஆகியோர் ஒரு மாதகாலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கண்ணூர்: நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் பிரா உள்ளாடையை கழற்ற கூறி அநாகரீகமாக நடந்து அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய குற்றத்திற்காக, கேரள பள்ளியில் பணியாற்றும் 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவு தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே வகையான தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும். அதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மத்திய மனித வளத்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
நேற்று நாடு முழுக்க நடைபெற்ற இந்த தேர்வின்போது மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதிலும், முதல் முறையாக தேர்வை சந்தித்த தமிழக மாணவ, மாணவிகள் நிலைமை சொல்லி மாளாது.

கேரளாவில் அராஜகம்
இந்த நிலையில் கேரளாவின் கண்ணூர் நகரிலுள்ள டிஐஎஸ்கே என்ற ஆங்கில மீடியம் பள்ளியில் நடைபெற்ற தேர்வின்போது, நினைத்து பார்க்க முடியாத அராஜகம் அரங்கேறியது. தேர்வு எழுத வந்த மாணவியை பிராவை கழற்றச் செய்து உத்தரவிட்டுள்ளனர் தேர்வை மேற்பார்வையிட்ட ஆசிரியர்கள்.

மெட்டலாம்
"பிரா ஹுக், மெட்டல் பொருளால் ஆனது என்பதால், மெட்டல் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்று காரணம் கூறி, அதே இடத்தில் பிராவை கழற்றுமாறு ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். அப்படி செய்யாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் எனவும் கடுமையாக கூறினர். எனவே, நான் பொது இடத்தில் வைத்து பிராவை கழற்றி, எனது தாயாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றேன்" என்று பயம் மாறாத குரலில் டிவி சேனலுக்கு பேட்டியளித்தார் அந்த மாணவி.

நடவடிக்கை
இந்த சம்பவம் ஊடகங்கள் வெளியாகிய நிலையில், தேர்வு நடத்தும் முறை, மற்றும் ஆசிரியர்களின் நடத்தை குறித்து கடும் விமர்சனங்கள் பொது வெளியில் எழுந்துள்ளன. இதனால் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிரியைகள், ஷீஜா, சஃபீனா, பிந்து மமற்றும் சஹைனா ஆகியோர் ஒரு மாதகாலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தவறுக்கு காரணம் இதுதான்
அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர் ஜலாலுதீன், டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "மாணவி பட்ட கஷ்டம் பற்றி எனக்கு தகவல் தெரிந்திருக்கவில்லை. ஆனால், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதித்து பார்த்த பிறகே மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பது விதிமுறை. மெட்டல் டிடெக்டர் கருவியை கடந்து செல்லும்போது, பீப் என சத்தம் எழுந்தால், மெட்டல் உபகரணங்களை நீக்கிவிட்டு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்த நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம். இதனால்தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications