நீட் அச்சம்: ஒரே ஆண்டில் 22 மாணவர்கள் பலி- ராஜஸ்தான் கோட்டாவில் தேர்வுகளை நிறுத்த அதிரடி உத்தரவு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் 2 மாதங்களுக்கு எந்த தேர்வும் நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தடுக்கி விழுந்தால் பயிற்சி மையங்கள்தான்.. நீட், ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்காக ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்துமே உண்டு உறைவிட மையங்களாகவே அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை பெற்றோர் இங்கு சேர்த்துள்ளனர்.

அதேநேரத்தில் நீட், ஜேஇஇவை எதிர்கொள்ள முடியாமலும் கடுமையான மன அழுத்தங்களாலும் இந்த தேர்வுகள் குறித்த அச்சத்தாலும் மாணவர்கள் இந்த விடுதிகளிலேயே தூக்கிட்டு மாண்டு போவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோட்டா பயிற்சி மையம் ஒன்றில் ஒரே நாளில் நேற்று 4 மணிநேர இடைவேளையில் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் கோட்டாவில் இந்த ஆண்டு மட்டும் 22 மாணவர்கள் இதேபோல தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான கோட்டா மையங்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து ராஜஸ்தான் கோட்டா பயிற்சி மையங்கள் அடுத்த 2 மாதங்களுக்கு எந்த ஒரு தேர்வையும் நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் நீட், ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி மையங்களின் செயல்பாடுகளை முழுமையாக விசாரணை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் பயிற்சி மையங்களில் தங்கி இருக்கு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications