சர்தார் வல்லபாய் படேலை மதவாதி என விமர்சித்தார் நேரு: அத்வானி
டெல்லி: சர்தார் வல்லபாய் படேலை முன்னாள் பிரதமர் நேரு "மதவாதி" என விமர்சித்ததாக அத்வானி தமது ப்ளாக்கில் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் சர்தார் வல்லபபாய் படேல், ஒரு மதசார்பற்ற தலைவர் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து சர்தார் படேல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்.கே.கே.நாயர் என்பவர் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி, அத்வானி ப்ளாக்கில் சர்தார் படேல், நேரு பற்றிய கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.

அதில், நாடு சுதந்திரம் அடைந்ததும் ஹைதராபாத்துக்கு ராணுவத்தை அனுப்புவது தொடர்பாக அப்போதைய பிரதமர் நேரு தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், ஹைதராபாத்தில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தார். அவருக்கு நேரு பதில் அளிக்கையில் திடீர் என்று படேலைப் பார்த்து, நீங்கள் முழு மதவாதி உங்கள் பரிந்துரையை ஏற்கமாட்டேன் என்று கூறியதாக பதிவு செய்திருக்கிறார்.
நேரு படேலை மதவாதி என்று கூறிய கருத்தை இப்போது அத்வானி வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது. சர்தார் படேல் ஹிந்துத்வா ஆதரவு தலைவர் என்று காட்டிக் கொள்வதற்காக அத்வானி இதை வெளியிட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications