ஆந்திராவில் 63 அப்பாவி தமிழர்கள் உட்பட 130 பேர் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்ற 63 அப்பாவி தமிழர்கள் உட்பட 130 பேர் கைது செய்துள்ளதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே பல நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்பே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் நடைபெற்ற போலி என்கவுன்டர் சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்ததை அடுத்து, துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்புவதற்காக 130 பேரையும் ஆந்திர போலீஸ் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மரம் வெட்டும் தொழிலாளர்கள் ஆந்திரா சென்றபோது மாயமானதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஆந்திரா போலீசார் 130 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 130 தானா அல்லது அதற்கும் மேலா என்பது தெரியவில்லை.
இதனிடையே நெல்லூர் போலீசார் 80 பேரை கைது செய்துள்ளதாகவும், ராஜம்பேட் பகுதியில் 52 பேர் கடப்பா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர காவல்துறை கூறியுள்ளது.
நெல்லூரில் கைது செய்யப்பட்ட 80 பேரும், ஏப்ரல் 7ஆம் தேதி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து தப்பிச்சென்றவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் மற்றும் நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக நெல்லூர் காவல்துறை கண்காணிப்பாளர் கஜாராவ் பூபால் கூறியுள்ளார்.
இதனிடையே 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பதால், பலியானவர்களின் உறவினர்கள் அனைவரும் ஆந்திரா சென்று அப்பாவிகளை போலீசார் சுட்டுக்கொன்றதாக புகார் அளித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து புகாரை பெறும் போலீசார் அத்தாட்சிக்கான ரசீது மட்டும் வழங்குகின்றனர். ஆனால் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications