இந்தியாவுக்கு எதிரானவர்.. நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா.. வீட்டை சூழ்ந்து பதவியை பறித்த இளைஞர்கள்
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் கடும் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த போராட்டம் வன்முறையாகி உள்ளது. அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நாட்டின் பிரதமரும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவருமான கேபி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நம் நாட்டின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இங்கு பிரதமராக இருப்பவர் கேபி சர்மா ஒலி. இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இந்நிலையில் தான் சமீபத்தில் நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசுக்கு எதிரான அவதூறு கருத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. அந்த வகையில் 4 நாட்களுக்கு முன்பு மொத்தம் 26 சமூக வலைதளங்களுக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார். இதில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் அடங்கும்.
இந்த சமூக வலைதளங்களின் தடைக்கு இளம் வயதினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் பல ஆயிரம் பேர் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையானது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த போராட்டம் இன்று 2வது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. காத்மாண்டுவில் மட்டும் நடந்த போராட்டம் நாடு முழுவதும் பரவ தொடங்கி உள்ளது.
ஒவ்வொரு இடங்களிலும் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டு வருகிறது. இதனால் நேபாளம் பற்றி எரிகிறது. போலீஸ், ராணுவம் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. மேலும் போராட்டக்காரர்கள் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும்.அவரது அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. அவர் ராஜினாமா செய்தால் தான் போராட்டம் நிறுத்தப்படும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில் தான் இளைஞர்களின் போராட்டத்துக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி பணிந்தார். அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தற்போதைய போராட்டம் - வன்முறை தொடர்ந்து வீரியமாகி வருகிறது. காத்மாண்டுவில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் கேபி சர்மா ஒலி நேபாளத்தை விட்டு விட்டு துபாய்க்கு தப்பித்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள கேபி சர்மா ஒலி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். சீனாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். நம் நாட்டுக்கும் நேபாளத்துக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ளது. இதனை காரணம் காட்டி நம் நாட்டுக்கு சொந்தமான சில பகுதிகளை அவர் உரிமை கொண்டாடி வந்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் கல்பானி மற்றும் அதனை சுற்றிய இடங்களுக்கு சொந்தம் கொண்டாடினார்.அந்த பகுதியை நேபாள நாட்டின் வரைபடத்தில் இணைத்து மேப் வெளியிட்டார். காலாபானி மட்டுமின்றி லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது என தொடர்ந்து கூறி வந்தார்.
அதுமட்டுமின்றி ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் நேபாளத்தில் பிறந்தவர். நேபாளத்தின் அயோத்தியாபுரியில் தான் ராமர் பிறந்தார். இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என்று தொடர்ந்து சர்ச்சையை கிளப்பியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications