நாளை மறுநாள் ரஷ்யா செல்கிறார் மோடி! கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்!!
டெல்லி: ரஷ்யாவுக்கு நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். அப்போது தமிழகத்தின் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் 23 மற்றும் 24-ந் தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது ரஷ்யா அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
ரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளத்தில் ஏற்கனவே 1,2வது அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. 3,4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து 5,6வது அணு உலைகள் தொடர்பான பேச்சுகள் நடைபெற்றன.
அண்மையில் கூட இந்தியாவுக்கு வருகை தந்த ரஷ்யாவின் அணுசக்தி துறை அதிகாரி ஸ்பாஸ்கியுடன் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பான பேச்சு நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
இதனால் மோடியின் இப்பயணத்தின் போது 5,6வது அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.