'சர்ச்சை' சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இன்று ஓய்வு- புதிய இயக்குநராக யாருக்கு வாய்ப்பு?
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குநராக உள்ள ரஞ்சித் சின்ஹா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் புதிய இயக்குநரைத் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேர்வுக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தற்போதைய இயக்குநர் ரஞ்சித் சின்காவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு, புதிய இயக்குநர் தேர்வு செய்யப்படவுள்ளார். சி.பி.ஐ இயக்குநரை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் தலைமையிலான குழு இதுவரை தேர்வு செய்து வந்தது.
லோக்பால் சட்டத் திருத்தத்தின்படி சி.பி.ஐ இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான நடைமுறை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வுக் குழுவின் தலைவராக பிரதமர் உள்ளார். அதில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவர் பரிந்துரைக்கும் ஒரு நீதிபதி ஆகியோர் இடம் பெறுவர்.
லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், பெரிய எதிர்க்கட்சியின் தலைவரை நியமனக் குழுவில் சேர்க்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது சிபிஐ இயக்குநர் நியமனக் குழுவில் பிரதமர் மோடி, லோக்சபாவின் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி இடம்பெறுள்ளனர். இந்த குழு இன்று கூடி புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும்.
பிரதமர் மோடி இல்லத்தில் இதற்கான கூட்டம் நடைபெற உள்ளது. இப்பதவிக்கு ராஜஸ்தான் மாநில காவல்துறைத் தலைவர் ஓமேந்திர பரத்வாஜ், கேரள காவல்துறைத் தலைவர் கே.எஸ்.பாலசுப்ரமணியம், மத்திய உள்துறை சிறப்பு செயலர் பிரகாஷ் மிஸ்ரா, தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஷரத் குமார், சிபிஐ சிறப்பு டிஜி அனில் சின்கா உள்ளிட்டோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சை நாயகன்
இன்று ஓய்வு பெறும் ரஞ்சித் சின்ஹா பல சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் குற்றவாளிகளை பலமுறை ரஞ்சித் சின்ஹா சந்தித்து பேசியதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கின் விசாரணையில் இருந்தே ரஞ்சின் சின்ஹா ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அண்மையில் அதிரடி உத்தரவிட்டது.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விசாரணை அறிக்கையை பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கின் அலுவலக அதிகாரி, சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமார் உள்ளிட்டோருடன் பகிர்ந்து கொண்ட விவகாரத்திலும் உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியவர் ரஞ்சித் சின்ஹா. இந்த விவகாரத்தில் அஸ்வனி குமார் தமது அமைச்சர் பதவியையே இழக்க நேரிட்டது.
இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ரஞ்சித் சின்ஹா, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமின் குவஹாத்தியில் நடைபெற்ற மாநாட்டில், நாட்டின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசிக் கொண்டிருக்கும்போதே குறட்டை விட்டு தூங்கி ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் ரஞ்சித் சின்ஹா என்பதும் குறிப்பிடத்தக்கது.