முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதே அரசின் நோக்கம்: பினராயி விஜயன் திட்டவட்டம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் அங்கு புதிய அணை கட்டுவதே அரசின் நோக்கம் என்று கேரள சட்டசபையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டியே தீருவோம் என கேரளா பிடிவாதமாக உள்ளது. புதிய அணை கட்டுவதற்காக சட்டசபையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 3 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசு பொறுப்பேற்றவுடன் இந்த பிரச்சினை குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் பேசினர். அப்போது, முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக அரசின் நிலை என்ன என்று கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு அணைக்கு பதில், அங்கு புதிய அணை கட்டுவதற்கே புதிய அரசு விரும்புகிறது.
சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான வாய்ப்பை ஆய்வு செய்த பிறகே புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை. இந்த விஷயத்தில் மாநிலத்தின் நலனை இந்த அரசு முழுமையாக பாதுகாக்கும். அத்துடன் அணையை சுற்றியுள்ள மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதிலும் அரசு முழுக் கவனம் செலுத்தும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக அரசு தெரிவிப்பது சரியானதே என்று அண்மையில் கேரள முதலமைச்சராக பதவியேற்றபோது பினராயி விஜயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications