சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பி.என்.நாராயணன் நம்பூதிரியும் மாளிகைப்புறம் மேல்சாந்தியாக பி.எம்.மனோஜும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு விழாக்காலங்களை முன்னிட்டு, புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறுவது வழக்கம். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான மண்டல-மகர விளக்கு பூஜை விழாக்களுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி, இந்த ஆண்டிற்கான சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புறம் அம்மன் கோவில்களுக்கு புதிய மேல் சாந்திகள் தேர்வு நேற்று நடைபெற்றது.
தகுதி பெற்றவர்களின் பெயர்கள் தாளில் எழுதப்பட்டு, வெள்ளி செம்பில் போடப்பட்டு சாமிக்கு முன் வைத்து சிறப்புபூஜை நடத்தப்பட்டது. பின்னர் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.
பெங்களூரை சேர்ந்த எல்.கே.ஜி. படித்து வரும் வியாஸ் கே.சர்மா என்ற சிறுவன் சபரிமலை மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தான். இதில் கோதமங்கலத்தை சேர்ந்த பி.என்.நாராயணன் நம்பூதிரி, அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக தேர்வு பெற்றார். மாளிகைப்புறம் மேல்சாந்தியாக பொன்னாணியை சேர்ந்த பி.எம்.மனோஜ் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
வரும் நவம்பர் 15-ந்தேதி இருவரும் பொறுப்பேற்கின்றனர். இவர்களின் பதவி காலம் ஒரு ஆண்டு ஆகும்.












Click it and Unblock the Notifications