புதிய பங்களாவில் குடியேறிய நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் புதிய பங்களாவில் குடியேறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். அவரின் தாய் ஹீராபென்(95) தனது மகன் பங்கஞ் மோடியுடன் வசித்து வருகிறார். குஜராத் அரசு ஊழியரான பங்கஞ் இத்தனை நாட்களாக அரசு அளித்த சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் காந்திநகரில் உள்ள ரைசன் பகுதியில் பங்களா ஒன்றை கட்டி வந்தார்.

கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் பங்கஞ் பங்களாவில் தனது குடும்பத்துடன் குடியேறினார். அனைத்து வசதிகளுடன் கூடிய அந்த பங்களா வாசலில் பாதுகாவலர்கள் உள்ளனர். இத்தனை நாட்களாக சிறிய வீட்டில் வசித்த ஹீராபென் தனது 95வது வயதில் பங்களாவில் குடியேறியுள்ளார்.
வயதான காரணத்தால் ஹீராபென் மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோடி தனது பிறந்தநாள் அன்று குஜராத் வந்து தனது தாயிடம் ஆசி பெற்றார். அப்போது ஹீராபென் அவருக்கு ஆசி வழங்கியதுடன் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கும் பணம் அளித்தார்.












Click it and Unblock the Notifications