தெலுங்கானாவில் பச்சிளம் குழந்தை ரூ.26ஆயிரத்துக்கு விற்பனை செய்த பரிதாபம்!!
நலகொண்டா: தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தில் பிறந்து இரண்டரை மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை 26000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நலகொண்டா மாவட்டம் சூரியபேட் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவுக்கார பெண்ணின் உதவியோடு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

இந்த சமயத்தில் பச்சிளம் குழந்தையை 26000 ரூபாய்க்கு விலை பேசி நிர்மலா என்ற பெண்ணிற்கு விற்பனை செய்துள்ளார். அவரும் சூரியபேட் பகுதியைச் சேர்ந்தவராம். இந்த பெண் குழந்தைகளை விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.
தனது குழந்தை விற்பனை செய்யப்பட்டது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாயார் கவிதா, புகார் அளிக்கவே, சூரியபேட் பகுதியைச் சேர்ந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து யாரையும் கைது செய்யவில்லை.
தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. பழங்குடியின மக்கள் வாழும் இம்மாவட்டத்தில் பெரிதும் ஏழ்மை காரணமாகவும் பெண் குழந்தைகள் விற்கப்படுகின்றனர். அங்கு அரசு நடத்தும் மையத்தில் இருந்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதை செய்தி நிறுவனம் ஒன்று கண்டறிந்து செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications