டெல்லியில் 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
டெல்லி: பத்து ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் டீசல் வாகனங்கள் டெல்லி வீதிகளில் செல்ல தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு டெல்லியில் காற்று மாசுபடுவதை குறைக்க அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

டென்மார்க், பிரேசில், சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகில் உள்ள பல நாடுகள் டீசல் வாகனங்களுக்கு முழுமையாகத் தடை விதித்துள்ளன. அல்லது தடை விதிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அல்லது அதிக வரிகளை விதிப்பதன் மூலம் டீசல் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
டீசல் வாகனங்கள் வெளியேற்றும் புகையைச் சுவாசித்து அதன் மூலம் மக்கள் நோய்களுக்கு ஆட்பட்டுவிடக் கூடாது என்று நாங்கள் கவலைப்படுகிறோம். அந்த நிலை ஏற்படாதவாறு அதுதொடர்பான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு நாங்கள் ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பித்துள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக தற்போது, கனரக வாகனமோ அல்லது இலகு ரக வாகனமோ எதுவானாலும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் டெல்லி சாலைகளில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் டெல்லி சாலைகளில் பயணிக்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications