பெங்களூர் மருத்துவமனை துப்பாக்கிச்சூடு: 3 மணிநேரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய விசாரணைக் கைதி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், வன்முறைக்கு பெயர் போனவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி விஸ்வநாத்(22) மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். போலீசார் அவரை பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அவ்வப்போது அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் போலீசார் அவரை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மதியம் 3.45 மணிக்கு அவர் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி தனது கைவிலங்கை கழற்றுமாறு தெரிவித்துள்ளார். உடனே ஒரு போலீஸ்காரரும் விலங்கை கழற்றிவிட்டுள்ளார். கழிவறையில் இருந்து திரும்பி வந்த அவர் போலீஸ்காரர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமான தரை மற்றும் மேற்கூரையை நோக்கி சுட்டுள்ளார். மேலும் அவர் பாதுகாவலர்களின் துப்பாக்கிகள் இருந்த அறைக்குள் சென்று தாக்குதல் நடத்தினார்.
இதையடுத்து ஒரு போலீஸ்காரர் அவரை அந்த அறையில் வைத்து பூட்டினார். இல்லை என்றால் விஸ்வநாத் இருந்த வேகத்திற்கு பல உயிர்கள் பலியாகியிருக்கக்கூடும்.
கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வன்முறையில் ஈடுபடுவதற்கு பெயர் போன ஒருவரின் கை விலங்கை கழற்றிவிட்டுள்ளனர். அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வன்முறைக்கு பெயர் போன ஒருவர் இருக்கும் இடத்தில் ஆயுதங்கள் இருந்த அறையை திறந்து வைத்தது போலீசாரின் தவறு என்று கூறப்படுகிறது.
முன்னதாக விஸ்வநாத் கோபத்தில் தனது வீட்டிற்கு வெளியே நின்ற பைக்கை தீ வைத்து எரித்ததால் தான் கைது செய்யப்பட்டார். குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த அறையை பூட்டி வைக்காதது முதல் தவறு ஆகும். விஸ்வநாத்தின் குணம் தெரிந்தும் அவரின் கைவிலங்கை கழற்றிவிட்டது அடுத்த தவறு. துப்பாக்கிகள் இருந்த அறைக்குள் விஸ்வநாத் நுழைந்ததும் அந்த அறைக் கதவை பூட்டிய போலீஸ்காரரின் செயல் பாராட்டுக்குரியது.
எவ்வளவோ பேசிப் பார்த்தும் கேட்காமல் விஸ்வநாத் அவ்வப்போது துப்பாக்கியால் சுட்டதால் கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விஸ்வநாத் இருந்த அறைக்குள் நுழைந்து அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவத்தால் சுமார் 3 மணிநேரம் மருத்துவமனை வளாகம் பதட்டமாக காணப்பட்டது.
விஸ்வநாத் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாய் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications