நிர்பயா 'எபெக்ட்'...? டெல்லியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 30 % சரிந்தது!
டெல்லி: டெல்லிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாம். அதாவது 30 சதவீத சரிவை டெல்லி சுற்றுலா கண்டுள்ளது. இதற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இறந்ததே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ மாணவி படுகொலை...
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்...
இதனால், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் நம்பகத்தன்மை இன்மை ஏற்பட்டது. இதன் விளைவாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது.

30 % குறைவு...
இந்நிலையில், சமீப காலமாக டெல்லியின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லியின் முக்கிய சுற்றுலாத் தளங்களான குதுப்மினார், ஹுமாயூன் கல்லறை மற்றும் செங்கோட்டை போன்றவற்றின் டிக்கெட் விற்பனை மூலம் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

பாரம்பரிய நகரம்...
அடுத்தாண்டு டெல்லியை பாரம்பரிய நகரமாக அறிவிக்க உள்ளது யுனெஸ்கோ. இந்த நிலையில் இப்படி ஒரு புள்ளி விவரம் வந்திருப்பதால் கவலை அடைந்துள்ள சுற்றுலாத் துறை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் விளம்பரங்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதிக வருவாய்...
ஏனெனில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை விட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலமாகவே அதிக வருவாய் ஈட்டப்படுகிறது.

பெண் பயணிகள்...
டெல்லி சம்பவத்திற்குப் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிலும் குறிப்பாக பெண் பயணிகள் இந்தியா வர தயங்குவதாகவும், குழுவாக மட்டுமே பெண் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

புள்ளி விபரம்...
குதுப்மினார், ஹூமாயின் சமாதி, செங்கோட்டை ஆகிய முக்கிய மூன்று டெல்லி சுற்றுலாத் தலங்களில் கிடைத்த டிக்கெட் வசூல் நிலவரத்தை வைத்து இந்த புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று இடங்களுமே மத்திய அரசின் தொல்லியல் துறையின் வசம் உள்ளவையாகும்.

இரண்டு காரணங்கள்...
சுற்றுலாப் பயணிகள் குறைவுக்கு மேலும் இரு காரணங்களும் கூறப்படுகின்றன. அதாவது மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணமாகக் கூட சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்திருக்கலாம் என்பது அதில் ஒன்று. இன்னொன்று, மத்திய தொல்லியல் துறை டிக்கெட் வசூல் விவரத்தை சரியாக குறிப்பிடாமல் குறைத்துக் கொடுத்திருக்கலாம் என்பது.

அச்சம்...
ஆனால் நிர்பயா விவகாரம் டெல்லியின் பெயரைக் கெடுத்துள்ளது என்பதும் அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதும் உண்மையே என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது.

இந்திய சுற்றுலாப் பயணிகள்...
அதேசமயம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கூட கணிசமாக குறைந்திருப்பதாக தொல்லியல் துறை கூறுகிறது.

தாஜ்மஹால்...
மேற்கண்ட இடங்கள் மட்டுமல்லாமல், ஜந்தர் மந்தர், புராணா குய்லா, சப்தர்ஜங் டோம்ப் ஆகியவற்றுக்கும் கூட கூட்டம் வருவதில்லையாம். தாஜ்மஹாலிலும் கூட 11 சதவீத அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications