"நமீதா"வை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!
போபால்: நமீதாவின் சேவையை பிரதமர் நரேந்திரமோடியே தொலைபேசியில் அழைத்துப் பார்த்துப் பாராட்டியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? இருங்க... இருங்க... அவசரப்படாதீங்க. இவங்க மச்சான் நடிகையில்லை பெண் சப் இன்ஸ்பெக்டர் நமீதா சாகு.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், பெண்கள் பாதுகாப்புக்காக, ‘நிர்பயா ரோந்து படை' என்ற தனிப்படை உள்ளது. அதன் தலைவராக இருப்பவர்தான் பெண் சப்-இன்ஸ்பெக்டர் நமீதா சாகு.

நிர்பயா ரோந்துப்படை
நிர்பயா ரோந்து படை பற்றியும் நமீதா சாகு பற்றியும் பிரதமரின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதற்கு ஒன்றரை லட்சம்பேர் ‘லைக்' போட்டிருந்தனர்.
போனில் பாராட்டு
அதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, நமீதா சாகுவை ஊக்கப்படுத்த விரும்பினார். அதன்படி, நமீதா சாகுவுடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேசி பாராட்டினார்.நம்மிடம் பிரதமர் பேசுகிறாரா? யாராவது மிமிக்கிரி செய்கின்றனரா? என்று ஆச்சரியமடைந்த நமீதா, பின்னர் சுதாரித்துக்கொண்டு பயமின்றி பேசினாராம்.
பணிகளுக்கு பாராட்டு
நமீதா சாகுவின் பணிகளைப் பாராட்டிய பிரதமர், அதே பாணியில் அவரது பணிகள் தொடர வேண்டும் என்றும், மற்ற பெண்களுக்கும் அவர் உந்துசக்தியாக திகழ வேண்டும் என்றும் தெரிவித்தாராம்.
இமெயில், தொலைபேசி எண்கள்
நமீதா சாகு குடும்பத்தினரின் நலன்களையும் விசாரித்தார். மேலும், தனது இ-மெயில் முகவரியையும், டெலிபோன் எண்ணையும் அளித்த மோடி, தேவைப்படும்போது தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாராம்.
ஒரே நாளில் ஓஹோ
பிரதமரே டெலிபோனில் பேசியதால், பெண் சப்-இன்ஸ்பெக்டர் நமீதா சாகு, ஒரே நாளில் பெரும் புகழ் அடைந்து விட்டார். பேஸ்புக்கில் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்து விட்டது.
ஒரே விசாரணைதான் போங்கள்
வாட்ஸ்அப்பிலும் மெசேஜ்கள் அதிகரித்துள்ளன. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் 80 சதவீத அழைப்புகள், அவரைப் பற்றியே விசாரிக்கின்றனவாம். இதனால் உற்சாகமடைந்துள்ளாராம் நமீதா.
நமீதா என்றாலே உற்சாகம்தான் போங்கள்!












Click it and Unblock the Notifications