பிரதமர் பதவிக்கு ‘பொறுமை’ அவசியம்...: மோடிக்கு அறிவுரை கூறிய நிதிஷ்குமார்
ராஜ்கர்: காங்கிரஸை வெளியேற்ற நினைக்கும் மோடியின் கனவு சாத்தியமல்ல, பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என மோடிக்கு அறிவுரைக் கூறியுள்ளார் நிதிஷ்குமார்.
பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிலைப்படுத்துவதை, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்த்தது. ஆனால் பா.ஜனதா தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அக்கட்சியுடனான 17 ஆண்டு கால கூட்டணியை முறித்துக்கொண்டது ஐக்கிய ஜனதா தளம்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பீகார் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் குஜராத் மாநில முதல்வரும், பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளாருமான நரேந்திர மோடி. அப்போது, விழா நடப்பதற்கு முன்னர், பொதுக்கூட்ட இடத்திற்கு அருகில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டு வெடித்ததில் ஒரு சதிகாரர் உட்பட 6 பேர் பலியானார்கள், காயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் மோடி மற்றும் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் ஆகிய இருவருக்குமிடையே மேலும் மோதல் அதிகமானது. இந்நிலையில் பீகார் மாநிலம் ராஜ்கரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது...

கூட்டணி முறிவு....
பா.ஜனதாவுடன் பல ஆண்டுகளாக வைத்திருந்த கூட்டணியை நாம் முறித்துக்கொண்டது நமது தவறு அல்ல. பா.ஜனதா தான் அதற்குக் காரணம். கூட்டணி முறிந்ததற்கு பல விஷயங்களைக் கூறலாம்.

விசாரணை நடைபெறுகிறது...
பாட்னாவில் நடந்த குண்டுவெடிப்பு கடும் கண்டனத்துக்குரியது. இதுதொடர்பாக பீகார் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு வந்திருக்கிறது. புத்தகயா குண்டுவெடிப்பு விசாரணை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையையும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அப்போது பாராட்டினார்கள்....
பாட்னா பொதுக்கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று நமது முன்னாள் நண்பர்கள் (பா.ஜனதா) குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஒருசமயம் அவர்கள் என்னை பாராட்டினார்கள், இப்போது என்னிடம் தவறுகளை கண்டுபிடிக்கிறார்கள்.

பொறுமை அவசியம்...
குஜராத் மக்கள் ஐஸ் கிரீமை விரும்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், உங்கள் வார்த்தைகளில் (மோடி) அந்த இனிப்பு பிரதிபலிக்கவில்லை. இந்தியாவின் உயர் பதவிக்கு வர விரும்புபவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய பதவி என்பதால், அவர் தைரியமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

கனவு பலிக்காது....
காங்கிரசை வெளியேற்றுவதற்கோ அல்லது உயர் பதவியில் உட்காருவதற்கோ நீங்கள் கனவு காண முடியும். ஆனால் அது சாத்தியமல்ல' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications