பீகார்: பாஜக கூட்டணி முறிவு- நிதிஷ்குமார் அறிவிப்பு! ஆர்ஜேடி, காங். உடன் ஜேடியூ இணைந்து புதிய அரசு?
பாட்னா: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஜேடியூ புதிய ஆட்சி அமைக்க உள்ளது. புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் இன்று மாலை 4 மணிக்கு நிதிஷ்குமார் சந்திக்க உள்ளார்.
Recommended Video
பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் தொடக்கம் முதலே பாஜக மீது முதல்வர் நிதிஷ்குமார் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் கேட்டும் கொடுக்க பாஜக மறுத்தது; ஜேடியூ கட்சிக்குள்ளேயே ஆர்பிசிங் உள்ளிட்டோரை நிதிஷ்குமாருக்கு எதிராக கொம்பு சீவிவிடுவது உள்ளிட்ட பல காரணங்களால் பாஜக மீது அதிருப்தியை காட்டி வந்தார் முதல்வர் நிதிஷ்குமார்.
மேலும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்தவும் நிதிஷ்குமார் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது என முடிவு செய்தார் நிதிஷ்குமார்.
இதனைத் தொடர்ந்து பாட்னாவில் ஜேடியூ எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ்குமார் அறிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
2024 லோக்சபா தேர்தல்: பிரதமர் வேட்பாளர் கனவு.. பாஜகவுக்கு நிதிஷ்குமார் குட்பை சொல்வதன் பின்னணி என்ன?
பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்ட நிலையில், லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் ஜேடியூ இணைந்து புதிய ஆட்சியை அமைக்க இருக்கிறது. ஏற்கனவே ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள், நிதிஷ்குமாருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளன.
பீகார் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் பலம்:
பீகார் மொத்த இடங்கள்: 243
தற்போது:
பாஜக- 77
நிதிஷ்குமாரின் ஜேடியூ- 45
ஹெச்.ஏ.எம்- 4
சுயேட்சை- 1
லாலுவின் ஆர்ஜேடி- 80
காங். 19
இடதுசாரிகள்- 16
மஜ்லிஸ் கட்சி- 1
பாஜகவை கழற்றிவிட்ட நிலையில் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள், ஜேடியூ இணைந்து ஆட்சி அமைத்தால் மொத்தம் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. பீகார் சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 122 என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 16 பாஜக அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜக இதனை திட்டவட்டமாக மறுத்தது. கூட்டணி தொடர்பாக நிதிஷ்குமார் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் பாஜக தலைவர்கள்.