பாஜக தேர்தல் வெற்றியால் நிதிஷ்குமார் கட்சியில் கலகம்.. மோடியை வாயார புகழ்ந்த எம்.பி.யால் அதிர்ச்சி!
பாட்னா: மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடியை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. சுனில் குமார் பின்டு பாராட்டியிருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக வென்றது. மத்திய பிரதேசத்தில் அமோக வெற்றியுடன் ஆட்சியைத் தக்க வைத்தது பாஜக. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடித்தது.

சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என அக்கட்சியின் தலைவர்கள் புகழ்வது வழக்கம். ஆனால் பாஜகவையும் பிரதமர் மோடியையும் பரம எதிரியாக கருதும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சி எம்.பியான சுனில் குமார் பின்டுதான் மோடியை அப்படி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். பிரதமர் மோடி நினைத்தால் அத்தனையும் சாத்தியமாகும் என்பதுதான் ஜேடியூ எம்பி சுனில் குமார் பின்டுவின் கருத்து.
இந்த கருத்து ஜேடியூ தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஜேடியூ கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் கூறுகையில், அப்படி எல்லாம் பிரதமர் மோடியை பாராட்டுகிறவர் ஜேடியூவில் இருக்க வேண்டியது இல்லை. எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் விருப்பப்படி முடிவெடுக்கலாம். லோக்சபா தேர்தலுக்கு முன்னரே முடிவெடுத்து கொள்ளட்டும் என்றார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்டகாலம் இடம் பெற்றிருந்ததுதான் ஜேடியூ. ஆனால் பாஜக மீதான கடும் அதிருப்தியால் கூட்டணியை முறித்துக் கொண்டது. அத்துடன் ஆர்ஜேடி- காங்கிரஸுடன் இணைந்து பீகாரில் கூட்டணி ஆட்சியையும் அமைத்துள்ளது. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியையும் உருவாக்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications