நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டிறைச்சிக்கு தடையில்லை... சொல்வது மேகாலயா பாஜக
வரும் 2018ல் பாஜக ஆட்சி மேகாலயாவில் அமைந்தால் மாட்டிறைச்சிக்குத் தடை இருக்காது என்று அம்மாநில பாஜக தலைவர் பெர்னார்ட் மராக் உறுதியளித்துள்ளார்.
ஷில்லாங்: இந்தியா முழுவதும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் மேகாலயா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மாட்டிறைச்சிக்குத் தடை வராது என்று மாநில பாஜக தலைவர் பெர்னார்ட் மராக் உறுதியளித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக இந்தியாவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்துள்ளது. அதனால் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
உடனடியாக இந்த தடையை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும், இது இந்திய அடிப்படை சட்ட உரிமைகளை மீறும் செயல் என்று கூறி காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
ஆனால் பாஜக அரசு சார்பில் எந்தப் பதிலும் இதுவரைத் தெரிவிக்கப்படவில்லை. அவ்வப்போது தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மட்டும் மாடுகளை இறைச்சிக்காக விற்கத்தான் தடை இறைச்சி உண்பதற்கு இல்லை என்று கூறி, மத்திய அரசின் உத்தரவுக்கு சப்பைக் கட்டு கட்டிவருகிறார்கள்.
இந்நிலையில், மேகாலயா மாநில பாஜக தலைவர் பெர்னார்ட் மராக், மாட்டிறைச்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
"வரும் 2018-ல் மேகாலயா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், மாட்டிறைச்சி தடைசெய்யப்படாது. அதற்குப் பதிலாக, முறையான இறைச்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டு மாட்டிறைச்சிக்கு சரி சமமான விலை நிர்ணயிக்கப்படும் " என்று பெர்னார்ட் மராக் கூறியுள்ளார்.