66 ஆண்டுகளில் முதன்முறையாக... குடியரசு தின விழாவில் "ஒட்டகம்" கிடையாதாம்!
டெல்லி: டெல்லியில் நடைபெறவுள்ள இந்தாண்டு குடியரசு தின விழாவில் ஒட்டக அணிவகுப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவ வீரர்கள் ஒட்டகங்களுடன் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் ஒட்டகங்களின் அணிவகுப்பு தவறாமல் இடம் பெற்று வந்தது.
1976ம் ஆண்டு முதல் ராணுவத்தினருக்கு பதிலாக எல்லை பாதுகாப்பு படையினர், ஒட்டகங்களில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க துவங்கினர்.

ஒட்டக அணிவகுப்பு...
அலங்கரிக்கப்பட்ட 54 ஒட்டகங்களில் ஓர் அணியும், 36 ஒட்டகங்களில் பல்வேறு வாத்தியங்களை இசைத்தபடி மற்றொரு அணியினரும் அணிவகுத்து வருவது வழக்கம்.

ரத்து...
ஆனால், இந்தாண்டு ஒட்டக அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவுக்கான ஒத்திகையில் ஒட்டக அணிவகுப்புப் பயிற்சி நடைபெறவில்லை என்பதே மேற்கண்ட தகவலுக்கு வலு சேர்க்கும் சான்றாக அமைந்துள்ளது.

மோப்ப நாய்கள் அணிவகுப்பு...
அதற்குப் பதில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பணிகளில் உள்ள மோப்ப நாய்கள் மற்றும் பயிற்சியாளர்களின் அணிவகுப்பும் பிரான்ஸ் ராணுவத்தினரின் பங்கேற்பும் இந்த அணிவகுப்பில் இடம் பெற உள்ளது.

விளக்கம் இல்லை...
கடந்த 65 ஆண்டுகளாக நடந்து வந்த ஒட்டக அணிவகுப்பு ஏன் இந்தாண்டு நடைபெறவில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்தாண்டு இந்த ஒட்டக அணிவகுப்பு மட்டுமின்றி துணை ராணுவத்தைச் சேர்ந்த பல பிரிவுகளின் பங்கேற்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications