பெண் அதிகாரிகளை போருக்கு அனுப்ப முடியாது: ராணுவம் திட்டவட்டம்
டெல்லி: குடியரசு தினத்தில் பெண்களை கௌரவித்த ராணுவம் பெண் அதிகாரிகளை போருக்கு அனுப்ப தயாராக இல்லை.
இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று விமானப்படை அதிகாரி பூஜா தாகூர் தலைமையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ராணுவ மரியாதையை(கார்டு ஆப் ஹானர்) ஏற்றுக் கொண்டார். முதல்முறையாக ஒரு பெண் தலைமையில் வெளிநாட்டு தலைவர் கார்டு ஆப் ஹானரை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வீராங்கனைகளை போருக்கு அனுப்பி வைக்க முடியாது என்று ராணுவம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
ராணுவ தளவதி ஜெனரல் தல்பீர் சிங் கடந்த 27ம் தேதி பெண் அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருந்து கொடுத்தார். பெண் அதிகாரிகளின் கெரியரை மேம்படுத்தும் திட்டம் குறித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் பங்களிப்பு அதிகம் என்றார் தல்பீர் சிங்.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பெண் அதிகாரிகளை காலாட்படை மற்றும் பீரங்கி படையில் சேர்க்க முடியாது என்று ராணுவம் நினைக்கிறது. இந்தியாவுக்குள் ஊடுருவும் நபர்களை எதிர்த்து சண்டை நடந்து வருகிறது. இது போன்ற சூழல் பெண்களுக்கு ஒத்து வராது. வடகிழக்கு அல்லது காஷ்மீரில் பெண்கள் பணியாற்றுவது கடினம் என்றார்.
முக்கியத்துவம் இல்லாததால் ராணுவத்தை விட்டு விலகிய பெண் ஒருவர் கூறுகையில்,
செங்கோட்டையில் மார்ச் செய்வது தான் பெண் சக்தி அல்ல. நாங்கள் ஒன்றும் சீருடை அணிந்த பொம்மைகள் இல்லை என்றார்.