உணவு பாதுகாப்பில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை!- மத்திய அரசு அறிவிப்பு!!!
டெல்லி : மேகி விவகாரம் விஸ்வரூபமெடுத்ததையடுத்து, உணவு பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
9 வகை மேகி நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ரசாயன பொருட்கள் கலந்து இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மேகி உணவு பொருட்களை திரும்பப்பெறுமாறு நெஸ்லே நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது..
அனைத்து மாநிலங்களும் நடத்திய ஆய்வுகளில் மேகி உணவு பொருட்களின் தரம் தோல்வி கண்டிருந்தது. அவற்றில் அளவுக்கு அதிகமாக ரசாயன பொருட்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகளை நெஸ்லே நிறுவனம் மீறி இருந்ததும் மேகி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் விதிமுறைகளும், பாதுகாப்பு அளவீடுகளும் பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் தான் மேகி நூடுல்ஸ் உணவு பொருட்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
உணவு பாதுகாப்பை பொறுத்தவரை அதில் விட்டுக்கொடுப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.