கடும் உரைக்கு பின் கட்டிப்பிடித்த ராகுல் காந்தி.. கைகொடுத்த மோடி.. அவையில் பரபரப்பு!
லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார்.
டெல்லி: லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார்.
தற்போது மிகவும் விறுவிறுப்பாக லோக் சபா கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார். அவரது பேச்சு அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எத்தனை கொலை
அதில், இந்தியா முழுக்க கொலை கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் நாடு மோசமான நிலையை எட்டிவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது.தொடர்ந்து பாஜகவினர் குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைதியோ அமைதி
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மோடி அமைதியாக இருக்கிறார். மோடியும், அமித் ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். கட்சி அதிகாரம் எல்லாம் அவர்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் ஜனநாயகம் இல்லை.
சிறுபான்மையினர் மீது தாக்குதல்
நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகமாகி உள்ளது. நாளுக்கு நாள் சிறுபான்மையின மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியா ஆபத்தான நிலையை அடைந்து இருக்கிறது என்றார். இந்த நிலையில் அவரது நேரம் முடிந்துவிட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.
நன்றாக பேசுவதாக
இதையடுத்து, நான் நன்றாக பேசுவதாக பாஜகவினர் என்னிடம் கூறினார்கள் என்று ராகுல் உரையை முடித்தார். தனது உரையை முடித்தவுடன் மோடியை கட்டிப்பிடித்து சிரித்தார். நேரடியாக சென்று மோடியின் இருக்கையில் அவரை கட்டிப்பிடித்தார் ராகுல். மோடி இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் அவரிடம் கைகொடுத்தார்.