வெள்ள பாதிப்பால் தமிழகத்தில் தொற்று நோய் பாதிப்பு இல்லை- மத்திய சுகாதாரக் குழு
டெல்லி: தமிழகத்தில் வெள்ள பாதிப்பினால் தொற்று நோய் எதுவும் பரவவில்லை என்று மத்திய சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார குழு 6 ஆம் தேதி சென்னை வந்தது. 7 பேர் கொண்ட அந்த குழுவினர் மாநில மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து 3 குழுக்களாக பிரிந்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவும் வகையில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார்கள். தமிழக சுகாதாரத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
பொது சுகாதாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்படியும் அறிவுரை வழங்கினார்கள். டெல்லியில் நேற்று அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பரவக்கூடிய நோய்களோ, தொற்றுநோய்களோ எதுவும் இல்லை" என்று கூறியுள்ளனர்.