விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை - ஏ.கே. அந்தோணி
டெல்லி: விவிஐபிக்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.

இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
இதன் மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும். இதில் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்யலாம் என தகவல்கள் வெளியாகின. இது குறித்து ராஜ்யசபாவில் பாரதீய ஜனதா எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடியின் கேள்விக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில்,அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications