ஹபீஸ் சயீத்தை ஜெயிலில் அடைக்க முடியாது: பாக். தூதர் திட்டவட்டம்!
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜமா உத் தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில் அவரை சிறையில் அடைக்க முடியாது என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலில் மூளையாக இருந்தவர் ஹபீஸ் சயீத் என்பது குற்றச்சாட்டு. இந்தியாவுக்கு எதிரான ஹபீஸ் சயீத்தை மூத்த பத்திரிகையாளர் வேத் பிரதாப் வைதிக், லாகூரில் சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையாகிப் போனது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சயீத்- வைதிக் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஹபீஸ் சயீத்- வைதிக் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் அரசுக்கு எதுவும் தெரியாது. இச்சந்திப்பு இரண்டு தனிநபர்களுக்கு இடையேயானது. இதில் வேறு எதுவும் இல்லை என்றார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு கூட இந்த சந்திப்பு தெரியாதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, இந்த சந்திப்புக்கும் பாகிஸ்தானுக்கும் எதுவும் தொடர்பில்லை என்று மட்டும் பதிலளித்தார் பசித்.
பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. சயீத்தை சிறையில் அடைப்பதற்கு வலுவான ஆதாரங்கள் தேவை. அப்படியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் சயீத்தை சிறையில் அடைக்க முடியாது என்றார்.
சர்ச்சைக்குரிய வைதிக் மீண்டும் விசாவுக்கு விண்ணப்பித்தால் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பசித் நேரடியாக பதில் தெரிவிப்பதை தவிர்த்துவிட்டார்.