சுதந்திர தின விழா கொண்டாட்டம் - வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே “நோ” இனிப்புகள், பரிசுகள்!
வாகா: நாட்டின் 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து வாகா எல்லையில் ராணுவ வீரர்கள் இந்நாளை கோலாகலமாக கொண்டாடினார்கள். எனினும், இந்திய, பாகிஸ்தான் வீரர்களுக்கிடையே இனிப்புகள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு சம்பிரதாயம் நடைபெறும்.
மாலையில் மீண்டும் தேசிய கொடி இறக்கப்படும். அப்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், மக்களும் அங்குள்ள ஸ்டேடியத்தில் அமர்ந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு ஊக்கப்படுத்துவார்கள்.
இன்று சுதந்திர தினத்தன்று காலையில் அணிவகுப்பும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தேச பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது வீரர்கள் நடனமாடி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர்.
எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான இப்பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கிடையே இனிப்புகளோ, பரிசுகளோ இந்த வருடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.