”6 வருஷம் ஆச்சு... பர்ஸ்ட் நைட்டே நடக்கலை” - புலம்பிய கணவருக்கு டைவர்ஸ் கொடுத்த கர்நாடகா ஹைகோர்ட்!
பெங்களூரு: பெங்களூருவில் கல்யாணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் முதலிரவே நடக்கவில்லை என்று மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட அரசு அதிகாரிக்கு டைவர்ஸ் வழங்கி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மைசூருவில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருபவர் கல்யாண். இவர் மனைவி பிரபாவதி. (பெயர்கள் மாற்றம்). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பிரபாவிற்கு தாய் மற்றும் சகோதரர் மட்டுமே உள்ளனர். அவருடைய தந்தை இறந்துவிட்டார். திருமண நிச்சயதார்த்தத்தின்போது கல்யாணின் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்றும், பிரபாவின் வீட்டில் முதலிரவு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
மேலும், சிவமொக்காவில் பணியாற்றி வரும் பிரபா திருமணத்திற்கு பின் பணி இடமாற்றம் பெற்று வருவதாக கல்யாணிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து கல்யாணுக்கும், பிரபாவிற்கும் திருமணம் நடந்தது. ஆனால், திருமணத்தின்போது பேசியபடி பிரபாவின் வீட்டில் முதலிரவுக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
இதனால் அவர்களுக்கு முதலிரவு நடக்கவில்லை. அதன்பிறகும், வெவ்வேறு காரணங்களை சொல்லி பிரபா, கல்யாணுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரபா தான் கூறியபடி பணி இடமாற்றமும் பெறவில்லை.
இதன் காரணமாக கல்யாண் மிகவும் மனம் உடைந்து போனார். இதனால், தனது இல்லற வாழ்க்கையை கூறியும், பிரபாவதி தன்னை கொடுமை செய்வதாக கூறியும் மைசூரு குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கோரினார். இதற்கு போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கல்யாண் மீது பிரபா குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தும் முதலிரவு நடக்காததை காரணம் காட்டியும் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி கல்யாண் கர்நாடக ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதி, கல்யாணுக்கு பிரபாவதியிடம் இருந்து விவகாரத்து வழங்கி உத்தரவிட்டார்.