பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. திருப்பதி லட்டு, தரிசன டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி கிடையாது !
திருமலை: தரிசன டிக்கெட், லட்டு மீது ஜிஎஸ்டி வரி கிடையாது என திருப்பதி ஏழுமலையான் கோயில் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி வரிமுறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த வரிமுறையை பல்வேறு தரப்பினர் ஆதரித்தும் எதிர்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி விதிப்பால் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு வரிச்சுமை அதிகரித்துள்ளதால் தரிசன டிக்கெட் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்த தேவஸ்தான தரப்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இதுகுறித்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான விடுதிகளில் 1000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். 2500 ரூபாய்க்கு அதிகமான தங்கும் அறைகளுக்கு 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும்.
அதேபோல் தேவஸ்தானம் சார்பில் விற்கப்படும் தங்க டாலருக்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் திருப்பதி லட்டு பிரசாதம், தரிசன டிக்கெட் மீது ஜிஎஸ்டி வரி இருக்காது. ஆதலால் லட்டு பிரசாதத்தின் விலை உயர வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.