என்னது ரூ100, ரூ50க்கும் தடையா? மத்திய அரசு விளக்கம்
100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
டெல்லி: 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் எண்ணம் ஏதும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தற்போது அதிகமாக புழங்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி இரவு திடீரென பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பழைய நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள், வங்கிகளுக்கு சென்று பொதுமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியாகும் என வதந்திகள் பரவின. இதையடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ட்விட்டர் மூலம் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
1/n #DeMonetisationMythsBusted
— PIB India (@PIB_India) November 16, 2016
MYTH: #DeMonetisation of 100 and 50 rupee notes soon!
REALITY: No such intention! pic.twitter.com/dE0FVi2Owg
அதில்,100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் எந்தவித யோசனையும் அரசிடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்றும், 500 மற்றும் 1,000 ரூபாயைத் தவிர மற்ற ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் எண்ணமில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.